மயிர்க் கால்களில் ஏற்படும் வறட்சியும் உடலின் சூடும் தலையிலுள்ள தோல்பகுதிகளுக்கு எண்ணெய் பசையை குறைத்து விடுகின்றன. முடியை சீப்பினால் வாரும்போது வறண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உரிகின்றது. இதைத்தான் பொடுகு என்று குறிப்பிடுகிறோம். இது தொத்து வியாதியைப் போல பரவுவதுண்டு. தலையிலுள்ள பொடுகு காதுக்குள் பரவி கடும் அரிப்பையும் ஏற்படுத்தலாம். அதனால் பொடுகுள்ளவர்கள் உபயோகிக்கும் சீப்பை மற்றவர் உபயோகிக்கக்கூடாது. தலையைச் சொரிந்த உடனே காதைக் குடைவதும் நல்லதல்ல.
சீயக்காய், சோப்பு போன்ற தோல் வறட்சியை அதிகமாக்கும் பொருளை அடிக்கடி உபயோகிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வடித்த கஞ்சி, கடலைமாவு, பயறுமாவு, முதலியவைகளில் ஏதேனும் ஒன்றை தண்ணீரில் குழைத்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் தோலின் நெய்ப்பும் பதமும் குறையாமல் பாதுகாக்க முடியும். எவ்வளவு எண்ணெய்யைத் தடவினாலும் பொடுகுடன் கூடிய தோல்பகுதி உறிஞ்சிக் கொண்டுவிடும். அதனால் விடாமல் அடிக்கடி தலைக்கு எண்ணெயைத் தடவ வேண்டும்.
காளான் இனத்தைச் சேர்ந்த கிருமியால் பொடுகு ஏற்பட்டதாகயிருந்தால் காதுகளில் அரிப்பு, சீழ், இரைச்சல் போன்ற உபாதைகளை உண்டாக்கக்கூடும். உடலிலும் பரவி, படை, சொறி போன்ற தோல் நோய்களும் ஏற்படுத்தக்கூடும். அதனால் சற்று கவனத்துடன் ஆரம்பத்திலேயே பொடுகை தடுப்பது அவசியம்.
அருகம்புல்லின் கஷாயத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் சில மூலிகைகளும் கலந்து காய்ச்சப்படும்.
தூர்வாதி கேர தைலம் - ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தைலத்தைத் தினமும் தலைக்குத் தடவி மேற்குறிப்பிட்ட கஞ்சி அல்லது மாவை தண்ணீரில் கரைத்து தேய்த்துக் குளித்த வர பொடுகு, அரிப்பு குறைந்துவிடும். உடலில் வரண்ட படையுள்ளவர்களும் இந்த எண்ணெயைத் தேய்த்து வர குணம் தெரியும்.
பாலும் மிளகும் அரைத்துச் சுடவைத்துத் தலைக்கு தூர்வாதி கேர தைலம் 1/2 மணிமுதல் 3/4 மணி நேரம் வரை ஊற வைத்துக் குளிக்கும் போது தேய்த்து குளிப்பதும் நல்லதே.
பொடுதலை என்ற ஒரு செடி தமிழ்நாட்டில் ஆறு குளம் குட்டை இவைகளின் கரைகளில் தானாகவே வளர்கிறது. இதன் காய் திப்பிலியை ஒத்திருக்கும். இதை வேருடன் பிடுங்கி பிழிந்து எடுத்த சாறுடன் அதற்கு சம அளவு நல்லெண்ணையும் சேர்த்து வெய்யிலில் வைத்து சாறு சுன்டியதும் எண்ணையை மாத்திரம் எடுத்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்கும்.
Comments
Post a Comment