நமது உறுப்புகளில் புலன்களும், புலன்களில் கண்களும் மிக முக்கியத்துவம் பெற்றவை. கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.
பண்ணைக் கீரை, சிறு கீரை இவற்றைத் தினமும் சாப்பிடுதல். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து உண்ணல். இரவு நேரங்களில் இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்துக் கொள்ளுதல். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல், பௌர்ணமியன்று இரவு சந்திரனைப் பார்த்துக் கொண்டிருத்தல். பற்களை முறைப்படித் துலக்குதல்.
வாய் நிறையத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, கண்களை நன்கு திறந்து சுத்தமான தண்ணீரினால் கண்களில் தெளித்துக் கொள்ளுதல்.
இரவில் படுக்கும் முன் திரிபலா சூர்ணம் (கடுக்காய் - நெல்லிக்காய் - தான்றிக்காய் அடங்கிய இது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 5 கிராம் அளவில் எடுத்து ஒன்றரை ஸ்பூன் (7.5mg) த்ரைபல கிருதம் என்னும் நெய்யை லேசாக உருக்கிப் பொடியுடன் குழைத்து, பிறகு அரை ஸ்பூன் தேன்விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடக் கண் குளிர்ச்சியாகும். கண்நோய் எதுவும் வராமல் பாதுகாக்க இது உதவும்.
Comments
Post a Comment