வாரம் இருமுறை - புதன் - சனிக் கிழமைகளில் ஆடவர்களும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்டிரும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்ற நல்ல பழக்கம் நம்முன் தலைமுறை வரை ஒழுங்காக நடந்துவந்தது. தற்போது சூழ்நிலை, தொழில், ஆகிய காரணங்களைக் காட்டியும், வீண் செலவு என்ற ஆதாரமற்ற கருத்துக்கு ஆட்பட்டும் இந்த நல்ல பழக்கம் புறக்கணிப்பட்டுள்ளது. உடல் உழைப்பு மிகுதி, உணர்ச்சிக் கொந்தளிப்பு இவைகளால் உடல் தசைகளும் மனமும் இறுகி அயர்ச்சியாக இருக்கும். தூக்கத்துக்கப் பிறகும்ட உடல், மனக் களைப்பு நீங்காமல் மறு நாள் விழித்து எழும்போதும் தொடரும். இதைத் தவிர்க்க சிறந்த உபாயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்தான். இப்படிக் குளித்த அன்று மனத்திற்கும் உடலுக்கும் ஒய்வு கிடைக்கிறது. ஆகவே இதைத் தினமும் செய்ய ஆயுர் வேதம் வலியுறுத்துகின்றது.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாமல் போனாலும் குளிக்கும் முன் தலை, காது, கால் இம்மூன்று இடங்களிலும் எண்ணெய் தேயத்து விடுவது அவசியம். தலைக்கு எண்ணெய் தடவுவதால் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது. சளி, ஜலதோஷம், மண்டைக் கனம், வரட்சி, பொடுகு, மயிர்க்கால்களில் அழுக்கு தங்கல், அதிக உடற்சூடு இவை நீங்கி கண் தெளிவடையும். கேசம் நன்கு வளரும். நல்ல தூக்கம் வரும்.
எண்ணெயைக் காய்ச்சி ஆறவைத்து இளஞ்சூடான நிலையில் காதில் விட்டுக் கொள்ளலாம். பஞ்சில் எண்ணெயை நனைத்து அதிகமான எண்ணெயைப் பிழிந்து விட்டுக் காதில் செருகிக் கொள்வது அதிக நல்லது. குளித்தபிறகு பஞ்சு சுற்றிய குச்சியால் புண்படாதவாறு காதினுள் துடைத்து விடுவது அவசியம்.
குளிக்கும் முன் உள்ளங்கால் கால்விரலிடுக்குகள், நகங்கள், கணுக்கால் பூட்டு, குதிகால் சதை இவற்றில் எண்ணெய் தடவித் தேய்த்துவிடுவது அவசியம். உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும், தசைகளும் உள்ள இடம் இவை. உள்ளங்காலிலிருந்து இரு நரம்புகள் மூளைக்கும் அதிலுள்ள கண்களுக்கான நரம்பு மண்டலத்துடனும் தொடர்பு கொள்பவையாகச் செல்கின்றன. காலில் எண்ணெய் தடவித் தேய்க்க கண்கள் தெளியும்.
Comments
Post a Comment